புலிகளின் வாகனத்தில் இருந்தே குண்டை எடுத்தேன், தற்கொலை செய்யவே கொண்டு வந்தேன் -பஸ் வெடித்தது எப்படி ?

தற்கொலை செய்துகொள்வதற்காகவே கைக்குண்டை வீட்டுக்கு எடுத்து சென்றேன்.எனினும் அது தவறுதலாக பஸ்ஸினுள் வைத்து வெடித்து விட்டது” என கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான இராணுவ அதிகாரி அதிர்ச்சி வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி வருகைத்தந்த தனியார் பஸ் வண்டி சுமார் அதிகாலை 5.30 மணியளவில் பண்டாரவளை பஸ்தரிப்பு நிலையத்தை வந்தடைந்துள்ளது.தியத்தலாவ நோக்கி பயணிக்கவிருந்த பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதை அடுத்து, பண்டாரவளை பஸ் நிலையத்திலிருந்து வேரொரு பஸ் வண்டியில் மேற்படி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வந்த பஸ் வண்டி சுமார் 5. 45 மணியளவில் கஹகொல்ல பிரதேசத்தை அண்மித்த போது, பாரிய வெடிப்பு சத்தத்துடன் பஸ் வண்டி தீப்பிடித்துள்ளது.

இந்தச் சம்பவம் அதிகாலை வேளை அந்த பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பஸ் வண்டியில் பயணித்த 19 பயணிகள் காயமடைந்தனர்.இவ்வாறு காயடைந்தவர்களில் 7 இராணுவ சிப்பாய்களும், 5 விமானப்படை சிப்பாய்களும், 7 பொது மக்களும் அடங்கினர். இந்த வெடிப்பு சம்பவத்துக்கு இராணுவ அதிகாரி ஒருவர் எடுத்து சென்ற கைக்குண்டே காரணம் என விசாரணைகள் மூலம் தெரிய வந்ததது. குறித்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ அதிகாரி தற்போது அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

‘எனக்கு 20 இலட்சம் ரூபா கடன் தொல்லை உள்ளது. வீடு கட்டுவதற்காகவும் வாகனம் வாங்குவதற்காகவும் பலரிடம் இந்த கடனை தொகையை வாங்கினேன். இந்த கடனை தற்போது திருப்பி கொடுக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் தற்கொலை செய்துகொண்டால் இந்த பிரச்சினையில் இருந்து விடுபட முடியும் என தீர்மானித்தேன். அதேவேளை எனது மனைவி பிள்ளைகளுக்கும் அரசாங்கத்திடம் இருந்து மாதம் மாதம் பணம் கிடைக்கும். இந்நிலையிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வாகனத்தில் இருந்த இந்த கைக்குண்டை கண்டு எடுத்தேன்.

பின்னர் அதனை காட்டில் மறைத்து வைத்து 2017 ஆம் ஆண்டு மாத்தளையில் உள்ள எனது வீட்டுக்கு கொண்டு வந்தேன்.சம்பவம் தினம் தற்கொலை செய்து கொள்வதற்காக குண்டை எடுத்துச் செல்லும் போது அது தவறுதலாக வெடித்து விட்டது என தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரியின் மனைவியும் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-athirvu.com

TAGS: