சீனா: ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்பட்டவருக்கு 13 ஆண்டுகள் சிறை

சீனாவில் மாநில அதிகாரத்தை அகற்ற வேண்டும் என்று ஜனநாயகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்த நபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

64 வயதான சின் யொங்மின், ஏற்கனவே 22 வருடங்களை சிறையில் கழித்துவிட்டார்.

சின், நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க மறுத்ததாகவும், விசாரணை முழுவதும் அவர் அமைதியாக இருந்ததாகவும் மனித உரிமை வழக்கறிஞர் லின், ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

ஜனநாயக சீனாவிற்கும், மனித உரிமைகளுக்காக போராடியதற்கும், அவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என சீன மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளர் ஃபிராண்சிஸ் ஈவ் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகால விசாரணைக்கு பிறகும், அவர் மீது அதிகாரிகளால் வழக்கு தொடர முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சீன ஜனநாயக கட்சியின் இணை நிறுவரான சின், 1998ஆம் ஆண்டில் இந்த கட்சியை அதிகாரபூர்வமாக பதிவு செய்ய முயற்சித்ததையடுத்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்கு சென்ற ஓராண்டிற்கு பிறகு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு சின்னின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

ஜனவரி 2015ஆம் ஆண்டு கைது செய்யப்படும்போது, ஜனநாயகத்திற்கு ஆதரவான குழுவான சீன மனித உரிமை கண்காணிப்பு குழுவிற்கு முன்னிலை வகித்து வந்தார். -BBC_Tamil

TAGS: