பாகிஸ்தான்: நாடு திரும்பியவுடன் நவாஸ் ஷெரீஃப் கைது

ஊழல் குற்றச்சாட்டில் சமீபத்தில் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார்.

அவருடன் வந்த அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டார். மரியமுக்கும் சமீபத்திய ஊழல் வழக்குத் தீர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்த நவாஸ் ஷெரீஃப் விமானம் மூலம் லாகூர் வந்து இறங்கினார். முன்னதாக, அவரது வருகையை ஒட்டி கூடுவதைத் தடுப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக நவாஸ் ஷெரீஃப் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக தமது பயண வழியில் அபுதாபியில் இறங்கியபோது பிபிசியிடம் பேசிய நவாஸ், மக்களை அரசு கடுமையாக ஒடுக்கிவருவதால், இந்தப் பின்னணியில் தற்போது பாகிஸ்தானில் நடக்கவுள்ள தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறினார்.

நவாஸ் நாடு திரும்பும்போது ஏற்படும் நிலைமையை கட்டுப்படுத்த ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். -BBC_Tamil