உச்சி மாநாடு: டிரம்பின் விமர்சகர்களுக்கு புதின் கண்டனம்

அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் ஹெல்சின்கியில் நடைபெற்ற உச்சி மாநாட்டை விமர்சிக்கும் அமெரிக்கர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டித்துள்ளார்.

ஹெல்சின்கியில் இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற ரஷ்ய-அமெரிக்க நாட்டு தலைவர்களின் உச்சி மாநாட்டு முடிவுகளை இந்த விமர்சகர்கள் குறைத்து மதிப்பிட முயல்வதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தங்களுடைய உள்நாட்டு அரசியல் இலக்குகளுக்காக இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை தியாகம் செய்ய அமெரிக்க அதிகார பிரிவுகள் விரும்புவதாக புதின் கூறியுள்ளார்.

ஹெல்சின்கி உச்சி மாநாடு மாபெரும் வெற்றி என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள புதின், இரண்டாவது சந்திப்புக்கு காத்திருப்பதாக ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது தொடர்பாக அதிபர் டிரம்ப், ரஷ்யா மீது மிகவும் மென்மையாக இருந்துவிட்டதாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினரிடம் இருந்து அதிபர் டிரம்ப் விமர்சனங்களை சந்தித்தார்.

டிரம்ப்

முன்னதாக, திங்கள்கிழமை புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்குக் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறியது சர்ச்சைக்குள்ளானது.

அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, மறுநாளே தாம் சொல்லவந்தது அதுவல்ல என்றும், ரஷ்யா தலையிட்டிருக்காது என்று சொல்ல ஒரு காரணமும் இல்லை என்று கூற விரும்பியதாகவும், ஒரு வார்த்தை மாறிவிட்டதாகவும் டிரம்ப் கூறினார்.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ரஷ்யா கடந்த காலத்தில் செய்ததைப் போல மீண்டும் அமெரிக்கத் தேர்தலில் தலையிடாமல் பார்த்துக்கொள்ள தீவிர நடவடிக்கைகளை அதிபரும், நிர்வாகமும் எடுத்துவருவதாகவும்” தெரிவித்தார். -BBC_Tamil