12 பள்ளிகளுக்கு தீ வைத்த பயங்கரவாதிகள்..

பாகிஸ்தானில் 12 பள்ளிகளுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்து பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியிலுள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் தொடர்ந்து வன்முறை தலைவிரித்தாடுகிறது. பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். கல்வி நிலையங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்குட்பட்ட சிலாஸ் நகரில் உள்ள 12 பள்ளிகளுக்கு நேற்று இரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. தீ வைக்கப்பட்ட பள்ளிகளில் பாதி பள்ளிகள் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் ஆகும்.

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீ வைத்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

-athirvu.in