இந்தோனீசியா : ”இரவு 9 மணிக்குமேல் தனியாக வரும் பெண்ணுக்கு உணவளிக்க கூடாது”

உணவகங்களுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக உணவருந்த வரும் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என்று இந்தோனீசியாவின் ஆட்ஜே (Aceh) மாகாணத்தின் ஒரு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

மேலும், திருமணமாகாத அல்லது உறவினர்களாக இல்லாத ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரக்கூடாது என்றும் அந்த ஆணை கூறுகிறது.

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இந்தோனீசியாவில், இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் இருக்கும் ஒரே மாகாணம் ஆட்ஜே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுப்பாடுகளை மீறினால் தற்போது தண்டனை எதுவும் கிடையாது என்றாலும், கட்டுப்பாட்டை முறைப்படி சட்டமாக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்க உள்ளூர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். -BBC_Tamil