வரவேற்கிறார் பிரித்தானிய அமைச்சர் – அவுஸ்ரேலியாவும் ஆதரவு

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் வரவேற்றுள்ளன.

இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் மார்க் பீல்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்காவின் அரசியல் நிலைமைகளுக்கு, அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

நெருங்கிய நண்பனாகவும், பங்காளராகவும் சிறிலங்காவுடன், பிரித்தானியா  தொடர்ந்து ஆதரவாக இருக்கும். நாட்டின் பொருளாதார மீட்சி, மனித உரிமைகள் முன்னேற்றம் உள்ளிட்ட நிலையான அபிவிருத்திக்கு ஆதரவளிப்போம்.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைய முன்னேற்றும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பிரித்தானியா கடமைப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு 8.3 பில்லியன் பவுண்டுகளை முரண்பாடு, உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு நிதியில் இருந்து, பிரித்தானியா வழங்கியுள்ளது.

காவல்துறை மறுசீரமைப்பு, பயிற்சி, நல்லிணக்கம், அமைதியைக் கட்டியெழுப்பல், மீள்குடியமர்வு, கண்ணிவெடி அகற்றல் போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை வரவேற்றுள்ள அவுஸ்ரேலிய தூதுவர், தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: