வங்கதேசத்தில் நடுவானில் விமானத்தை கடத்த முயற்சி; அவசரமாக தரையிறக்கம்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

வங்கதேசத்தில் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகள் இருந்த அந்த பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியது.

BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தைச் சுற்றிவளைத்துள்ள காவல் படையினர், அதைக் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபருடன் பேசி வருகின்றனர்.

விமானத்தை கடத்த முயற்சி

விமானத்தின் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர் ஏன் அந்த விமானத்தைக் கடத்த முயன்றார் என்ற தகவல் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள படங்களில் போயிங் 747 ரக விமானம் நிறுத்தப்பட்டிருப்பதும், விமான ஓடுதளத்தின் அருகே சிலர் கூடியிருப்பதும் தெரிகிறது. -BBC_Tamil