போர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் இரான் மொத்தமாக ஒழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்க இரானை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் வெள்ளிக்கிழமை அன்று என்பிசி தொலைக்காட்சியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

தனது நாட்டின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது பற்றியும் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்தப்பட்டால் 150 இரானியர்கள் கொல்லப்படலாம் என்று தனக்கு கூறப்பட்டதால் அந்த முடிவை கைவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் இரானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இரான் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், இரானின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விமானம்

என்ன கூறினார் டிரம்ப்?

தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்ததாகவும். தன்னுடைய அனுமதிக்காக காத்திருந்ததாகவும். ஆனால், இதில் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று ராணுவ ஜெனரல்களிடம் கேட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

“ஒரு நிமிடம் இதை பற்றி யோசித்தேன். அவர்கள் ஓர் ஆளில்லாத விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள், ஆனால் இத்தாக்குதல் நடத்த நான் அனுமதி அளித்திருந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் 150 பேர் உயிரிழந்திருப்பார்கள்” என்று என்பிசியிடம் பேசிய டிரம்ப் கூறினார்.

இரானை தாக்க ஏற்கனவே அப்போது விமானங்கள் அனுப்பபட்டது என்ற செய்திகளையும் அவர் மறுத்தார்.

இரான் தலைவர்களை குறிப்பிட்டு பேசிய டிரம்ப், “நீங்கள் அணுஆயுதங்களை வைத்திருக்க முடியாது. இதுகுறித்து பேச வேண்டுமானால் பேசலாம். இல்லையென்றால் வரும் காலங்களில் நீங்கள் மோசமான பொருளாதார நிலையில் வாழ வேண்டியிருக்கும்” என்றார்.

சுட்டு வீழ்த்தப்பட்டது

இரான் என்ன கூறுகிறது?

இரான் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா சர்வதேச விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

“இரான் பிராந்திய விதிகளை மீறினால், நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வோம்” என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் செயித் சஜத்பொர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இரான் அரசாங்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு டிரம்ப் நிர்வாகத்தின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். -BBC_Tamil