சீனாவின் கட்டாய முகாம்களில் இருக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன?- உண்மையைத் தேடி பிபிசியின் பயணம்

சீனாவில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் பல லட்சம் முஸ்லிம் வீகர் இன மக்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணை ஏதுமின்றி முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

ஆனால் ”தீவிரவாதத்தை” தடுக்கும் மையங்களில் வீகர் இன முஸ்லிம்கள் தாங்களாக முன்வந்து கலந்து கொள்வதாக சீனா கூறுகிறது. அவற்றில் ஒரு மையத்துக்குள் பிபிசி சென்று ஆய்வு செய்தது.

முன்னர் முகாம்களுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால் காரில் சென்று கொண்டே, கம்பி வேலி மற்றும் கண்காணிப்புக் கோபுரங்களை பார்த்தது தான் நெருக்கத்தில் நான் பார்த்ததாக இருந்தது. சாதாரண உடையில் எங்களைப் பின்தொடர்ந்து வந்த காவலர்கள் நாங்கள் நெருங்கிவிடாதபடி தடுத்துவிடுவார்கள்.

இப்போது உள்ளே பார்வையிடுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள்.

அதை ஏற்றுக் கொள்வதன் ஆபத்து வெளிப்படையானதுதான். கவனமாக தயார் செய்யப்பட்டதைப் போல தெரிந்த பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். சமீபத்தில் இருந்த பாதுகாப்பு கட்டமைப்புகள் நீக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் மூலம் எடுத்த படங்கள் காட்டின.

உள்ளே ஒவ்வொருவராக நாங்கள் பேசியதில், சிலர் பதற்றமாக இருப்பது தெரிந்தது. அவர்கள் ஒரே மாதிரியான கதைகளைக் கூறினர்.

ஜின்ஜியாங்கில் அதி தீவிர பாதுகாப்பு முகாமின் கட்டடம்

அவர்கள் அனைவரும் ஜின்ஜியாங்கின் மிகப் பெரிய, பிரதானமாக முஸ்லிம் இன குழுவான வீகர் மக்களாக இருந்தார்கள். ”தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்” என்று தங்களைப் பற்றி அவர்கள் கூறினர். தங்களுடைய ”சிந்தனைகளை மறு சீரமைப்பு” செய்து கொள்வதற்காக தாங்களாக முன்வந்து அவர்கள் அங்கே வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

எங்களிடம் பேசுவதற்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் வார்த்தைகள் மூலமாக சீனா தெரிவித்த கருத்துகள் இவை. அவர்களிடம் குறுக்கு விசாரணையாகக் கேள்விகள் கேட்பது தீவிர ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

வாய்தவறி அவர்கள் எதையாவது சொல்லிவிட்டால், அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? உண்மை நிலையில் இருந்து பிரசாரத்தை நாங்கள் எப்படி பாதுகாப்பாக பிரித்துப் பார்ப்பது?

தீவிரவாதமானதும் மறுபிறப்பும்

செய்தி சேகரிப்பில் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்பட்ட பல நிகழ்வுகள் உண்டு.

2004ஆம் ஆண்டில் இராக்கில் அமெரிக்காவால் நிர்வகிக்கப்பட்ட அபு கிராய்ப் சிறைக்குள் நிறைய செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அத்துமீறல்கள் நடப்பதாக எழுந்த புகார்களை அடுத்து அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குரல் எழுப்பிக் கொண்டு, அங்கே அடைக்கப்பட்டிருந்தவர்களை நெருங்காத அளவுக்கு செய்தியாளர்கள் மொத்தமாக, தள்ளியே வைக்கப்பட்டனர். சிலர் செயற்கைக் கால்களை அசைத்து தங்கள் நிலையை காட்டிக் கொண்டிருந்தனர்.

முகாமில் இருந்த ஆண்கள் அனைவருமே நீல நிற டிராக்சூட் ``சீருடை'' அணிந்திருந்தனர்.

ஆஸ்திரேலியாவின் கடலோர அகதிகள் தடுப்புக் காவல் மையங்களுக்கு அபூர்வமாக மற்றும் கட்டுப்பாடுகளுடன் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட உதாரணம் இருக்கிறது.

1930கள் மற்றும் 1940களில், தாங்கள் எந்த அளவுக்கு ”மனிதாபிமானம்” மிக்கவர்கள் என்பதைக் காட்டுவதற்காக சொன்னென்பர்க் மற்றும் தெரெசியன்ஸ்டாட் முகாம்களுக்கு செய்தியாளர்களை ஜெர்மனி அரசு அழைத்துச் சென்றது.

அந்த அனைத்து நிகழ்வுகளிலும், உலக அளவில் முக்கியத்துவமான கதைகளுக்கு நிருபர்கள் சாட்சிகளாக இருந்தனர். அதனால் பாதிக்கப்பட்டவர்களை கட்டுப்பாடுகளுடன் அணுக அனுமதிக்கப்பட்ட நிலையில், விஷயங்கள் சொல்ல வைக்கப்பட்டன.

ஜின்ஜியாங்கில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. அங்கே உள்ள சூழ்நிலைகள் நன்றாகத்தான் இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காக மட்டுமின்றி, அவர்கள் சிறைவாசிகள் அல்ல என்று நிரூபிக்கும் வகையிலும் இதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தனர்.

நல்ல வெளிச்சமான வகுப்பறைகளில் பள்ளிக்கூட மேசைகளில், வரிசை வரிசையாக வயது வந்தவர்கள் அமர்ந்து, சீன மொழியை கற்றுக் கொண்டு, ஒரே மாதிரியாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

சீனாவின் முஸ்லிம்கள் தங்கள் ”சிந்தனைகளை மறுசீரமைப்பு” செய்து கொள்வதற்காக தங்கியுள்ள முகாம்களை பிபிசி பார்வையிட்டது. வகுப்பறைகளில் வரிசைகளாக அமர்ந்து கல்வி கற்கும் பெரியவர்கள்.

சிலர் நன்றாக பயிற்சி செய்த இசை மற்றும் நடனங்களை எங்களுக்காக செய்து காட்டினர். பாரம்பரிய உடைகளை உடுத்தியிருந்த அவர்கள், மேசைகளை சுற்றி வந்து நடனம் ஆடினர். அவர்கள் முகங்களில் செயற்கையான புன்னகை தெரிந்தது.

சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் என்ன நடக்கிறது?

மற்றவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டவாறு நடனம் ஆடினர். எங்களுக்குக் காண்பிக்கப்பட்ட காட்சிகளை சீன அதிகாரிகள் முழுமையாக நம்பினர் என்பதும், சிலருக்கு கண்ணீர் வந்ததும் தெளிவாகத் தெரிந்தது.

மக்கள் மறுபடி பிறந்தவர்களைப் போல இருந்தார்கள். ஒரு காலத்தில் அபாயகரமான அளவுக்கு தீவிரவாத செயல்பாடுகளுடனும், சீன அரசுக்கு எதிராக வெறுப்புடனும் இருந்த அவர்கள், இப்போது பாதுகாப்பாக பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறார்கள். அதே அரசாங்கம் உரிய காலத்தில் மேற்கொண்ட, நலன்சார்ந்த தலையீட்டு முயற்சிகளால் இது சாத்தியமாகியுள்ளது.

இதில் இருந்து மேற்கத்திய நாடுகள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்தி.

மறுகல்வி அளிக்கும் கொள்கை தொடங்கப்பட்ட தேதியை சுட்டிக்காட்டும் மூத்த அதிகாரி ஒருவர் என்னை உற்றுப் பார்த்தார்.

”ஜின்ஜியாங்கில் 32 மாதங்களில் தீவிரவாதத் தாக்குதல் ஒன்றுகூட நடக்கவில்லை” என்று அவர் கூறினார். ”இதுதான் எங்களுடைய தேசபக்தியுடனான கடமை” என்றார் அவர்.

`ஓ என் மனமே, தளர்ந்துவிடாதே’

ஆனால், உள்ளே செல்வதற்கான அனுமதியை ஏற்பது, அதிகாரபூர்வமாக அவர்கள் தெரிவிக்கும் தகவலுக்குள் புதைந்திருக்கும் விஷயங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதும், எங்களால் இயன்ற வரையில் கூர்மையாக ஆய்வு செய்வதும் எங்களுடைய பணியாக இருந்தது.

வீகர் மொழியில் எழுதப்பட்டிருந்த சில தகவல்களை நாங்கள் படம் பிடித்துக் கொண்டு வந்தோம். பிறகு அவற்றை நாங்கள் மொழி பெயர்த்தோம்.

”ஓ! என் மனமே, உடைந்து போய்விடாதே” என்றது ஒரு குறிப்பு. ”படிப்படியாக” என்று தெரிவிக்கிறது சீன மொழியில் இருந்த மற்றொரு குறிப்பு.

பெண்கள் தங்கும் பொது அறையின் உள்பக்கத்தில் உள்ள குளியலறை.

அதிகாரிகளுடன் நடத்திய நீண்ட நேர்காணல்களில் அதற்கான பதில்கள் கிடைத்தன. அங்குள்ள நடைமுறையின் இயல்பு பற்றிய தகவல்கள் அதில் கிடைத்தன.

”ஏறத்தாழ அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்கள்” என்று அவர்கள் கூறியதும் இதில் அடங்கும். குற்றச் செயலில் ஈடுபட்டதால் மட்டும் அவர்கள் அபாயகரமானவர்களாகப் பார்க்கப்படவில்லை. குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடும் என்ற நிலையிலும் அப்படி பார்க்கப்பட்டார்கள்.

தீவிரவாத சிந்தனை உள்ளவர்களாக ஒரு முறை அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு விருப்ப வாய்ப்புகள் தரப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அப்படி எதுவும் காணப்படவில்லை.

”நீதிமன்ற விசாரணை அல்லது தீவிரவாத சிந்தனைகளில் இருந்து விடுபடும் கல்வி வசதிகளை ஏற்பது” என்பதுதான் அவர்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளாக உள்ளன.

”பெரும்பாலானவர்கள் படிப்பதற்கு விரும்பினார்கள்” என்று எங்களிடம் சொல்லப்பட்டது. அங்குள்ள சூழ்நிலைகளைப் பார்த்தால், விசாரணை நேர்மையாக நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

தீவிரவாதம் என்பதற்கான வரையறை இப்போது மிகவும் பரவலான வரம்பாக உள்ளது என்று மற்ற தகவல்கள் மூலம் நாங்கள் அறிந்து கொ்டோம். உதாரணத்துக்கு நீளமாக தாடி வைத்திருப்பது அல்லது வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுடன் தொடர்பு கொள்வது போன்றவையும் தீவிரவாத வரம்புக்குள்பட்ட விஷயங்களாகக் கருதப்படுகின்றன.

சீன கொடியின் இதய வடிவிலான ஒரு ஸ்டிக்கர் அங்கு லாக்கர் மீது ஒட்டியிருந்தது.

இந்தத் ”தீவிரவாதிகள்” தூங்குவதற்கான பொதுவான படுக்கை அறைகளை நாங்கள் பார்த்தோம். ஓர் அறைக்கு 10 பேர் வரை தூங்கும் வகையில் உள்ளது. கட்டில் படுக்கைகளுடன், ஓர் ஓரத்தில் குளியலறை வசதியும் உள்ளது. சன்னமான துணியால் படுக்கைகள் மூடப்பட்டிருந்தன.

பிறகு எச்சரிக்கையாக கேட்கப்பட்ட கேள்விகள் பல விஷயங்களை வெளிப்படுத்தின. அவர்கள் சொன்னவற்றால் அல்ல, சொல்ல முடியாதவற்றால்.

கடந்த எட்டு மாதங்களில் அங்கு யாரெல்லாம் இருந்தார்கள், அந்த காலக்கட்டத்தில் எத்தனை பேர் ”கற்றலை முடித்தார்கள்” என்று ஆண் ஒருவரிடம் நான் கேட்டேன்.

சிறிய மௌனத்துக்குப் பிறகு அவர் பதில் அளித்தார். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறினார்.

இனம் மற்றும் அவர்களின் நம்பிக்கை அடிப்படையில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காவல் கட்டுப்பாட்டுடன் வைக்கப் பட்டுள்ள பெரிய நடைமுறையில் இருந்து ஒரே ஒரு குரல் வெளிப்பட்டுள்ளது.

எந்த அளவுக்கு சன்னமான மற்றும் அடக்கப்பட்ட குரலாக இருந்தாலும், அந்தக் குரல்கள் எதைச் சொல்ல வருகின்றன என்பதை நாம் கவனமாகக் கவனிக்க வேண்டும். -BBC_Tamil