ஹாங்காங் நாடாளுமன்றம் சூறை: “தீவிர வன்முறை செயல்” – ஹாங்காங் தலைவர் கேரி லேம் கண்டனம்

போராட்டக்காரர்கள் ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சூறையாடியதை “தீவிர வன்முறை செயல்” என ஹாங்காங் தலைவர் கேரி லேம் கண்டித்துள்ளார்.

திங்கள் இரவு போராட்டக்காரர்கள் ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து 1 மணி நேரம் அதை ஆக்கிரமித்தனர்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவரை தைவான் மற்றும் சீனாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் போராடி வருகிறார்கள்.

காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து இருந்தோரை வெளியேற்றிய பின்னர், ஹாங்காங் தலைமை செயலதிகாரி கேரி லேம் செய்தியாளர்களை சந்தித்தார்.

“போராட்டக்காரர்கள் குறிப்பாக நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களின் செயல் கண்டிக்கப்படவேண்டியது. ஹாங்காங்கில் சட்டத்தின் ஆட்சியே அனைத்தையும் விட முக்கியமானது” என காவல்துறை ஆய்வாளர் லோ வெய்-சுங் பாதுகாப்போடு பேசிய கேரி லேம் கூறினார்.

கண்ணாடியை உடைக்கும் போராட்டக்காரர்கள்

நடந்தது என்ன?

பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட 22வது ஆண்டு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் ஜனநாயகத்திற்கு ஆதரவான பேரணி ஆண்டுதோறும் நடத்தப்படுவதுண்டு.

இந்த ஆண்டு குற்றவாளிகளை ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து பல வாரங்கள் போராட்டங்கள் நடைபெறும்போது, இந்த ஆண்டு தினம் வந்துள்ளது.

இந்த நிலையில், ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்கள் திங்கள் இரவு அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

போராட்டக்காரர்கள்

ஹாங்காங் நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் முன்புற கண்ணாடிகளை பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கொண்டு உடைக்க அதை மற்ற போராட்டக்காரர்கள் சூழ்ந்து இருந்து பார்வையிட்டனர்.

நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் வெளிப்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான வாசகங்களை சுவர்களில் எழுதியதுடன், வெளியே சூழ்ந்திருக்கும் போராட்டக்காரர்களை நோக்கி கைகளை அசைத்தனர்.

நாடாளுமன்றத்தில் போராட்டக்காரர்கள்

நாடாளுமன்ற அவையின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கைது செய்யப்படுவார்கள் உள்ளிட்ட எச்சரிக்கைகளை காவல்துறையினர் விடுத்தனர்.

இருப்பினும், கட்டடத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர்.

மார்ச் மாதம் தொடங்கிய போராட்டம்

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தொடங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலையில் போராட்டக்காரர்கள்

ஹாங்காங் அரசாங்கத்திற்கு எதிராக அமைதி வழியில் நடைபெற்று வரும் போராட்டத்தின் வடிவம், தற்போது முதல் முறையாக திசைமாறியுள்ளது.

ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின் இப்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் வீதியில் பேரணியாக சென்று போராடி வருகிறார்கள். -BBC_Tamil