குடியிருப்பு பகுதியில் விழுந்த பாகிஸ்தான் ராணுவ விமானம் – 17 பேர் பலி

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதிக்குள் சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழ்ந்தனர் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் இருந்த ஐந்து பேர் மற்றும் பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் 12 பேர் இதில் காயமடைந்துள்ளனர்.

அந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.

பாகிஸ்தான் விபத்துபடத்தின் காப்புரிமைAFP

விமானம் கீழே விழுந்ததும் தீப்பற்றி எரிந்தது. அந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் ராவல்பிண்டியில் ராணுவத் தலைமையகம் அமைந்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெளிவாக தெரியவில்லை.

பாகிஸ்தான்படத்தின் காப்புரிமைAFP

விபத்து பகுதியில் பொது மக்கள் சூழ்ந்துவிட்டனர். அதில் சிலர் அழுது கொண்டிருக்கின்றனர் என ஏஎஃப்பி செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வீடுகளில் கரும்புகை படிந்துள்ளதையும், சில வீடுகள் இடிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஏஎஃப்பியின் செய்தியாளர், அந்த பகுதியில் உள்ள இடிபாடுகளில் இருந்து புகை இன்னும் வந்துக் கொண்டிருப்பதாகவும், வீட்டின் கூரை ஒன்றின் மீது விமானத்தின் பகுதி ஒன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு தனியார் விமான சேவை நிறுவனமான ஏர்ப்ளூவின் விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 150 பேர் உயிரிழந்தனர் அதுவே பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மோசமான விமான விபத்தாகும். -BBC_Tamil