ஒரே நாளில் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு எத்தியோப்பியா உலக சாதனை!

எத்தியோப்பியாவில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரங்களை நட்டு எத்தியோப்பிய மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

கிழக்கு ஆப்ரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2வது நாடாக எத்தியோப்பியா திகழ்கிறது. இதன் வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வரும் நிலையில், மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட எத்தியோப்பிய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி நேற்று, எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது தலைமையில் ‘பசுமை மரபு’ என்ற பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு 12 மணிநேரத்தில் சுமார் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.

நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களும் பங்கேற்கும் வகையில் நேற்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 2016ம் ஆண்டு இந்தியா 12 மணி நேரத்தில் ஆறு கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருந்ததே உலக சாதனையாக கருதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-https://athirvu.in