வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரிய – அமெரிக்க ராணுவப் பயிற்சிக்கு பதிலடி

அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையை கண்காணித்து வருவதாகவும், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா திங்கள் கிழமை மேற்கொண்ட கூட்டு ராணுவப் பயிற்சி குறித்த தனது கோபத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது வட கொரியா.

இந்த வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சிகள் ஆடம்பரமாக நடைபெறவில்லை. எனினும், இது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் ஆகியோருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், ஏவுகணை சோதனைகள் செய்வதாகவும் கூறி அமெரிக்காவும் மற்றும் உலக நாடுகளும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil