இலங்கை கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா

இலங்கையில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் கடற்படை முகாம் மூடப்பட்டு உள்ளது.

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் கடற்படை முகாம் உள்ளது. அங்கு ஒரு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 30 பேருக்கு கொரோனா தாக்கியிருப்பது தெரிய வந்தது. இத்தகவலை இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதி செய்தார்.

கடற்படை முகாமில் கொரோனா பரவியதையடுத்து, அந்த முகாம் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து மூடப்பட்டுள்ளது. அங்குள்ள எல்லா வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் பலியாகி உள்ளனர். கொழும்பு மற்றும் புறநகர்களில் ஊரடங்கு நீடிக்கிறது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

malaimalar