‘புர்கா தடைக்கு அவசரமில்லை’

முஸ்லிம்களுடனான உறவுக்கு நீண்ட வரலாறு உள்ளதெனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புர்காவை தடைசெய்வதற்கு அவசரப்படவில்லை, அத்துடன் திறந்தவெளி கலந்துரையாடலுக்குப் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

அரசாங்கத் தகவல்கள்  திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

“நீண்ட வரலாற்றை கொண்ட உறவு இருந்தாலும் கலாசார மாற்றம் ஏற்பட்டது. இங்குமட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் அந்த கலாசார மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்திருந்தது. இங்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்வாறான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட எனினும், அதற்கு அவசரப்படவில்லை” என்றார்.

அதுதொடர்பில் காலவரையறையை பார்க்கவேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, திறந்த வெளிகலந்துரையாடல்கள் மூலம் தீர்வொன்று எட்டப்படும். அத்துடன், இதுதொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவில்லை என்றார்.

TamilMirror