ஜீவி காத்தையா அவர்களுக்கு ஒரு நினைவஞ்சலி

நேற்று இரவு, ஜொகூர் பாரு, கங்கார் பூலாயில் தொழிற்சங்கவாதியும் சமூகச் செயற்பாட்டாளருமான ஜீவி காத்தையா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், காரைநகர் நட்புறவு மையத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில், பொது இயக்கத் தோழர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மிகக் குறுகியக் கால ஏற்பாட்டில், செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு ஏற்ப நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்ததால், அதிகமான தோழர்களை அழைக்க முடியாமல் போனது என செம்பருத்தி தோழர்கள் ஒருங்கிணைப்பாளர் சாந்தலட்சுமி பெருமாள்  வருத்தம் தெரிவித்தார்.

எனினும், கடந்த ஓராண்டாக ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முயன்று, கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணத்தால் தோற்றுபோன நிலையில், நேற்றிரவு இந்த நிகழ்ச்சி மனநிறைவை அளித்தது என்றும் அவர் சொன்னார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், அத்தொழிற்சங்கவாதி உடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது, நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.