ஐநாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உரை – முக்கிய விவரங்கள்

ஐநா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரை நிகழ்த்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன், கடந்த 19ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள், கடந்த சில தினங்களாக பேசுப் பொருளாகியிருந்தன.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரை நிகழ்த்தியிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிவின் உரையில் உள்ளடங்கிய முக்கிய 10 விடயங்கள்:

  1. 2030ம் ஆண்டு அடைய எதிர்பார்த்திருந்த நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலை செயற்படுவதற்கு  கோவிட் பரவல் பாதகமாக அமைந்துள்ளது.
  2. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேசப் பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது.
  3. தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. சோகமயமான உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரத்துக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
  4. காலநிலை மாற்றங்கள் மற்றும் பல்லுயிர்ப் பரம்பல் இல்லாமல் போவதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, தீர்க்கமான மற்றும் உடனடியான பலதரப்பு நடவடிக்கையொன்றின் தேவை அவசியமாகியுள்ளது.
  5. 2030ஆம் ஆண்டுக்குள், நைட்ரஜன் கழிவுகளின் அளவை பாதியாகக் குறைக்க எதிர்பார்த்திருப்பதோடு, நிலையான நைட்ரஜன் முகாமைத்துவம் பற்றிய கொழும்பு சாசனத்தை நிறைவேற்றிக் கொண்டதன் மூலம், சுற்றுச்சூழல் மாசடைவைக் கட்டுப்படுத்தி, உலகளாவிய முயற்சிகளுக்கு, இலங்கையும் பங்களிப்பு நல்கியுள்ளது.
  6. அடுத்த சில தசாப்தங்களில், வனப்பகுதியை கணிசமானளவில் அதிகரிப்பதே குறிக்கோள்.
  7. பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது.
  8. கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளது.
  9. வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் தமது அரசு உறுதியாக உள்ளது. அதனால், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  10. ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் இலங்கை அதிபர் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

(நன்றி BBC TAMIL)