‘இதயம் தாங்கவில்லை’ – ஏப்ரல் 27ம் தேதி நாகேந்திரனுக்கு தூக்கு

பல ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனைக் கைதியான நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் (வயது 34) தூக்குத் தண்டனையை ஏப்ரல் 27 ஆம் தேதியில் மேற்கொள்ளப்படும் என்று  அவரது வழக்கறிஞர் எம். ரவி தெரிவித்தார்.

அறிவுசார் ஊனமுற்ற ஒருவரை தூக்கிலிட்டதற்காக சிங்கப்பூருக்கு உண்டாகும்  உலகலாவிய  “அவமானத்தில்” இருந்து மீள முடியாது என்றும், இந்த செய்தி “மனதை உடைக்கிறது ” என்றார்.

“நாகேந்திரன் அடுத்த புதன்கிழமை தூக்கிலிடப்படுவார் என்ற மனவேதனைக்குரிய செய்தி இப்போதுதான் கிடைத்தது.”

“இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே எல்லாமே தவறு. விசாரணையில் அரசு மனநல மருத்துவர் கூட நாகேந்திரன் அசாதாரண மன நோயால் பாதிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.”

“ மரணதணடனை நிறைவேற்றப்பட்டால் அனைத்து சிங்கப்பூரர்களின் கைகளிலும் இரத்தக் கறை இருக்கும் என்று நான் கூறுவேன். ஏனெனில் இதைத் தடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது,” என்று அவர் லிங்க்ட்இனில்(LinkedIn) கூறினார்.

சிங்கப்பூர் நீதிமன்றம் மார்ச் மாதம் அந்த மலேசிய பிரஜையின்  மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை நிராகரித்தது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை காப்பாற்ற வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் குழு முன்வைத்த வாதத்தை நிராகரித்தது.

உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் சட்டங்களைக் கொண்ட சிங்கப்பூருக்கு சுமார் 42.7 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக நாகேந்திரணுக்கு  மரண தண்டனை வழங்கப்பட்டது. அவர் இந்த குற்றத்தை 2009-இல் புரிந்தார்.