தொடர் வன்முறை எதிரொலி: அனைத்து ரெயில்களும் ரத்து செய்து இலங்கை உத்தரவு

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மதியம் கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. போலீசார், மகிந்த ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு இலங்கை முழுவதுமே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். வத்துபிடிவல பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 27 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த கலவரத்தை தொடர்ந்து, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவத் தொடங்கியுள்ளது. மொரட்டுவை மேயரின் வீட்டிற்கு தீ வைத்ததால் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், இலங்கயைில் பல்வேறு இடங்களில் தொடர் வன்முறை ஏற்பட்டதை அடுத்து அனைத்து ரெயில்களும் ரத்து செய்து ரெயில்வே துறை பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாகவும், இன்று இயக்கப்பட்டு வரும் ரெயில்கள் அந்தந்த இடங்கள் வரை மட்டும் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து காவலர்களுக்கான விடுமுறையை ரத்து செய்து இலங்கை காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

 

Malaimalar