அவுஸ்திரேலியாவில் புதிய ஆட்சி – ஈழத் தமிழர் விவகாரத்தில் சாதகமான முடிவு

அவுஸ்திரேலியாவில் மட்டும் அல்லாமல் உலகளாவிய ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஈழத் தமிழர்களான நடேசன் மற்றும் பிரியா தம்பதியின் வதிவிட உரிமை குறித்த புதிய தொழிற்கட்சி அரசாங்கம் சாதகமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

புதிய அரசாங்கம் இன்று அறிவித்த இந்த முடிவின் படி, நடேசன் மற்றும் பிரியா தம்பதி மற்றும் அவர்களின் பிள்ளைகள் மீண்டும் குயின்ஸ்லாந்தின் பிலோலா நகரத்துக்கு திரும்பவுள்ளனர்.

புதிய இடைக்கால உள்துறை அமைச்சர், ஜிம் சால்மர்ஸ் ( Jim Chalmers) இன்று எடுத்த முடிவின்படி அவுஸ்திரேலிய குடியேற்றச் சட்டத்தின் கீழ் இந்த குடும்பத்துக்கு பிரிட்ஜிங் விசா எனப்படும் சிறப்பு நுழைவிசைவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலமாக தேர்தலுக்கு முன்னர் தொழிற்கட்சி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் முடிவு

தொலைபேசி ஊடாக உள்துறை அமைச்சர் இந்த விடயத்தை இன்று கூறியபோது அதனை தன்னால் நம்ப முடியவில்லை என பிரியா முருகப்பன் கூறினார்.

புதிய அரசாங்கம் ஒவ்வொரு அகதிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்ற பின்னர் நடேஸ் மற்றும் பிரியா முருகப்பன் புகலிடக் கோரிக்கையுடன் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்திருந்தனர். அங்குதான் அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்திருந்தனர்.

ஆயினும் இவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நுழைவிசைவு அனுமதி, கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் அவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரான அந்தனி அல்பானீசும் இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

 

 

 

IBC Tamil