பொதுமக்களை தொடர்ந்தும் வருத்த வேண்டாம்! ஆட்சியாளர்களிடம் சஜித் வேண்டுகோள்

பிரச்சினைகளினால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பொதுமக்களை இனியும் வருத்த வேண்டாம் என்று சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு-07ல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச,

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும்

இருபத்தி நான்கு மணிநேரமும் வரிசைகளில் காத்திருந்து சிரமப்படும் பொதுமக்களின் சிரமங்களை புரிந்துகொள்ளாத இந்த ஆட்சி உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

20 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் நெருக்கடிகளை தீர்க்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இந்த அரசாங்கம் தொடர்ந்தும் தங்கள் இயலாமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

எனவே இவர்கள் உண்மையான மக்களின் வரம் பெற்ற ஆட்சியொன்று விரைவில் உருவாகக்கூடிய வகையில் தேர்தலொன்றுக்கு வழிவிட்டு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Tamilwin