ஆஸி. அணிக்கு நன்றி தெரிவிக்க மஞ்சள் நிற ஆடை அணிந்து வருக: இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இவ்வாறு மஞ்சள் ஆடை அணியுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு

இந்தத் திட்டத்துக்கு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 3 இற்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதோடு, ஒரு போட்டி மீதமிருக்கத் தொடரையும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நான்காவது போட்டியில் கைப்பற்றியுள்ளது.

சுமார் முப்பது வருடங்களின் பின்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tamilwin