நாளை இலங்கை வருகின்றது அமெரிக்க உயர் மட்ட குழு: இடம்பெற உள்ள முக்கிய பேச்சு வார்த்தை

அமெரிக்க உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் குழு அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழு என தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளர் ஆகியோரும் விஜயம் செய்யவுள்ளனர்.

அமெரிக்கா உதவக்கூடிய வழிகள் குறித்து பேச்சுவார்த்தை

அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சந்திப்பார்கள் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் அமெரிக்கா உதவக்கூடிய வழிகள் குறித்து பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

159 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவி

கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையின் பல்வேறு துறைகளுக்கு கிட்டத்தட்ட 159 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடும் இலங்கையின் தீர்மானத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

 

IBC Tamil