அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு பின் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை எந்த சந்தர்ப்பத்திலும் கலைக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிடைக்கும்.

தேர்தலுக்கு செல்லக்கூடிய கூடுதலான வாய்ப்பு-பொதுஜன பெரமுன இணங்காத நிலைமை

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையின் அடிப்படையில் தேர்தலுக்கு செல்லக்கூடிய கூடுதலான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் அவசரமான தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கு எந்த வகையிலும் பொதுஜன பெரமுன இணங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவரசமான தேர்தல் ஒன்றுக்கு சென்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வியை தழுவும் நிலைமை காணப்படுவதாகவும் பொதுத் தேர்தலுக்கு செல்வதை அந்த கட்சி விரும்பாது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கை

இதனால், பதவிக்காலம் முடியும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டாம் என பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதவி காலம் முடியும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கக் கூடாது என்பதே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்குகளை வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுன முன்வைத்த பிரதான கோரிக்கையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-tw