அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க நாம் தயாராக இல்லை – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தேர்தல் தொகுதிக் கூட்டம் இன்று (08) இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையில் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,

அபிவிருத்தி வேலைத்திட்டம்

“வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று அவசியமாகும். எமது நாட்டுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதே புதிய பிரவேசமாக அமையும்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எவ்வளவு அழுத்தங்களும் அசௌகரியங்களும் இருந்தாலும் அதைக் குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த அரசாங்கத்தில் சமூக பாதுகாப்பு திட்டமொன்று இல்லை. ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்த வண்ணம் அமைச்சுகளை பெருக்கிக்கொள்ளும் பாதுகாப்புத் திட்டமே அவர்களுக்கு உள்ளது.

நாட்டை வங்குரோத்தடையச் செய்த நாமல் ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பேரவைக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, நாட்டின் கொள்கை முன்னுரிமைகளை உருவாக்குவதற்குத் தேவையான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது நகைப்புக்குரிய விடயம்.

நாட்டை அழித்த ராஜபக்சர்களிடமிருந்து தீர்வுகள் காண வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மக்களை ஏமாற்றிய வண்ணம் செயற்பட்டு வருகின்றனர்.

அரசியல் மோசடிகள்

இது போன்ற அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ தயாராக இல்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்ட எதையும் இந்த அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்துவதாக இல்லை. அவர்கள் தங்களுக்கு நன்மை பயக்கும் பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் உள்ளன. மக்களிடம் பொய் சொல்லாமல் 2.9 பில்லியன் டொலர்களை எமது நாட்டிற்கு பெறத் தேவையான ஆதரவை கேட்டால் அதை வழங்கலாம்.

அப்படி அல்லாமல், நாட்டுக்கு பொய் சொல்லி, எங்களிடம் உதவி கேட்டால், அதற்கு எவ்விதத்திலும் சம்மதிக்கவே மாட்டோம்” என்றார்.

 

 

-ibc