இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு தீர்மானம்: பிரதமர்

உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டங்களுக்கமைய உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாத்துவை புதிய சந்தைத் தொகுதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எப்போதும் வர்த்தக சமூகத்தினருக்கு சக்தியை அளிக்கும் விதத்தில் செயற்படுவதற்கான தீர்மானங்களை எடுப்பதுடன், பொதுமக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் முதலாவது நிறுவனமாக, உள்ளூராட்சி நிறுவனங்கள் செயற்படுகின்றது.

அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள்

பொதுமக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவைகளை வழங்கும் பொருட்டு களுத்துறை பிதேச சபையை, நகர சபையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நிதிப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தாலும், கோவிட் தொற்று உலகளாவிய ரீதியில் பரவியமையானது, இந்நெருக்கடி மேலும் தீவிரமடைவதற்குக் காரணமாக அமைகின்றது.

இதனால் பொதுமக்களது சுகாதாரத்திற்காக அதிகளவான பணத்தை அரசாங்கம் செலவு செய்யவேண்டியேற்பட்டதுடன், தற்போது இருக்கும் நிலைமைகளை சமாளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.

மாகாண சபை மற்றும் பிதேச சபையின் பங்களிப்பு

இந்த சந்தைத் தொகுதியானது இரண்டு மாடிகளைக் கொண்டுள்ளதுடன் சிறந்த இடவசதிளைக்கொண்ட 30 அறைகளையும் கொண்டுள்ளது. இதற்காக ரூபா 950 இலட்சங்கள் செலவிடப்பட்டுள்ளன.

புரநெகும திட்டத்தின் ஊடாகவும், மாகாண சபை மற்றும் பிதேச சபை ஊடாகவும் இதற்கான நிதி வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மேல் மாகாண சபை ஆளுனர் ரொஷான் குணதிலக, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, களுத்துறை மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜானக குமார கினிகே, பாணந்துறை பிரதேச சபைத் தலைவர் ஹேமந்த பிரனாந்து மற்றும் பாணந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-tw