சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும், ஈழத்தமிழர்களுக்கு ஒருமுகத்தையும் காட்டும் ரணில் அரசு

சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும், ஈழத்தமிழர்களுக்கு ஒருமுகத்தையும் காட்டும் ரணில் அரசு!தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு ஒரு முகத்தையும் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு முகத்தையும் காட்டிக்கொண்டிருக்கிறது என பொத்துவில் தொடக்கம் பொலிக்கண்டி வரையிலான பேரியக்கத்தின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன் போராட்டகாரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகங்கள் மூலமாக போராட்டகாரர்களை முன்னேறவிடாது தடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இங்கு ஸ்ரீலங்கா பொலீஸ் அராஜகத்தாலேயே எங்களுடைய ஜனநாயகம் முடக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு ஒரு முகத்தையும் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு முகத்தையும் காட்டிக்கொண்டிருப்பதை; மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

ரணில் அரசு ஆடுகின்ற நாடகத்தை நாங்கள் நம்பமாட்டோம். இதை எமது தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் என்று அவர் கூறினார்.

 

 

-ift