நெருக்கடியில் உள்ள கல்வித்துறை, அவசர சீர்திருத்தங்கள் தேவை – சையட் சாடிக்

தற்போதைய கல்வி முறையில் உள்ள பலவீனங்களால், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மலாய் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் அல்லது சர்வதேச பள்ளிகளில் கணிசமாக அதிக செலவில் சேர்க்கின்றனர் என்று மூடாத் தலைவர் சையட்சாடிக் சையட் அப்துல் ரஹ்மான்(Syed Saddiq Syed Abdul Rahman) தெரிவித்துள்ளார்.

அரச உரைகுறித்த தனது விவாதத்தில், மூவார் எம்.பி. இந்த மாறும் போக்கு கல்வித் துறை நெருக்கடியில் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும், மேலும் அவசர சீர்திருத்தங்கள் தேவை என்று கூறினார்.

“கடந்த காலங்களில், சீன மற்றும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எவ்வாறு தாய்நாட்டுப் பற்றற்றவர்கள் என்றும், அவர்களின் குடும்பங்கள் தேசிய பள்ளிகளுக்குச் செல்வதை விரும்பவில்லை என்பது குறித்து அடிக்கடி தவறான அச்சங்கள் எழுப்பப்பட்டன”.

“ஆனால் இன்றைய உண்மை என்னவென்றால், மலாய் நடுத்தர வர்க்க குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் அல்லது சர்வதேச பள்ளிகளுக்கு அனுப்ப தங்கள் மாத வருமானத்தில் கால் பகுதியைச் செலவிட தயாராக உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“அவர்கள் சொன்ன காரணங்கள் என்ன? தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் எழுத்தர் கடமைகள், நிர்வாகப் பணிகள், இரண்டு அல்லது மூன்று பொறுப்புகளில் பெரும் சுமையை எதிர்கொள்கின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்”.

“ஆசிரியர்கள் என்ற முறையில் தங்கள் முக்கிய கடமைகளைத் தற்காலிகமாக ஒதுக்கிவைக்கும் அளவுக்கு அவர்கள் சுமக்கும் சுமை உள்ளது, அதாவது கற்பித்தல்”, என்று சையட் சாடிக் கூறினார்.

மூவார் எம்பி சையட்சாடிக் சையட் அப்துல் ரஹ்மான்

தனியார் கல்வியுடன் ஒப்பிடுகையில், தேசிய பாடத்திட்டத்தின் தரம்குறித்து பெற்றோர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர், இந்த ஏற்றத்தாழ்வு கவனிக்கப்படாவிட்டால் வறுமை இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்றார்.

அதனால்தான் நமது கல்வி முறையை மாற்றியமைக்க தார்மீக மற்றும் அரசியல் தைரியம் வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ஒட்டுமொத்தமாக, சையட் சாடிக் கூறுகையில், தேசிய செலவினத்தில் 20% வரை பொதுவாகக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படுகிறது, இது அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையாகும்.

எவ்வாறாயினும், கணிதம், அறிவியல் மற்றும் வாசிப்பில் 15 வயது பள்ளி மாணவர்களின் கல்வி செயல்திறனை அளவிடுவதன் மூலம் கல்வி முறைகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான உலகளாவிய திட்டத்தில் (Programme for International Student Assessment) சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டும் மலேசியாவை முந்தியுள்ளன.

அரச உரையில் எழுப்பப்பட்ட பல விசயங்களைக் கல்வி அமைச்சு ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மற்றவற்றுடன், டிஜிட்டல் கல்விக் கொள்கையையும், பள்ளிகள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதையும் அமைச்சகம் தொடங்கும் என்று கூறியது.