13 ஆவது திருத்தச் சட்டம் எல்லோருக்கும் நல்லது

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எமது மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் கூட பாரதப் பிரதமரின் கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம்

அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சின் பிரகாரம் அவருடைய ஆலோசனையைக் கேட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு செயற்படுவது நல்லம்.

அது நாட்டுக்கும் நல்லம். மக்களுக்கும் நல்லம். பாரதப் பிரதமர் மேலதிகமாக எதனையும் கேட்கவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நீங்கள் (இலங்கை அரசு) நிறைவேற்றிய 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்திச் செயற்பட வேண்டும் என்றே அவர் கோரியுள்ளார்.

இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எமது மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் கூட பாரதப் பிரதமரின் கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைகள் தற்போது வெறுமனவே உள்ளன. மீண்டும் அந்த மாகாண சபைகள் இயங்க வேண்டுமெனில் தேர்தல் ஒன்று மிகவும் அவசியம். எனவே, மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தக் கோரியுள்ளார் பாரதப் பிரதமர். அதையும் நாம் வரவேற்கின்றோம்.

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையான தீர்வாக அமைய முடியாது. இருந்தாலும் பாரதப் பிரதமர் சொல்லியதைக் கேட்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நாட்டுக்கும் நல்லம், அரசுக்கும் நல்லம், மக்களுக்கும் நல்லம், எல்லோருக்கும் நல்லம் என்றார்.

 

 

-tw