நில உரிமையற்று வசிக்கும் 15 000 பேருக்கு உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை

கொழும்பு ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (02.08.2023 ) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும் 15,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும்   ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக கால்வாய்களை சுத்தம் செய்யக் கூட நிதி ஒதுக்க முடியாத நிலை காணப்பட்டதாகவும், உலக வங்கியுடன் கலந்துரையாடி, நிதி அமைச்சின் ஆதரவுடன் இரண்டு திட்டங்களுக்கு 10,000 மில்லியன் ரூபா ஒதுக்க முடிந்ததாகவும் அதில் கால்வாய்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைப்பதற்கு 3,000 மில்லியன் ரூபா ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அத்தோடு கடன் அடிப்படையில் இந்த நிதி பெற்றுக்கொள்ளப்படுவதால் நீண்ட கால பயன்பாட்டைக்கொண்ட பணிகளுக்கு இதனை செலவிட அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக மகாவலி வலயத்தில் வசிக்கும் காணி உரிமைகள் இன்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்போருக்கு காணி உறுதிகளை வழங்கும் பணியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி “காணி உறுதி வீட்டுக்கே” என்ற தொனிப்பொருளில், மகாவலி காணிகளில் வசிப்பவர்களுக்கான காணி உறுதிகளை அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அதன் மூலம் இதுவரை 20,000 காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 15,000 உறுதிகளை வழங்க அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவித்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், குறிப்பிட்ட சில நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை விடுவிக்கும்போது அது மின் உற்பத்தியைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு மின் உற்பத்தி மற்றும் விவசாயம் என்பன பாதிக்காத வண்ணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக காணி உறுதிகளை வழங்கும் பணியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

-jv