அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணிக்கு நீதிமன்றம் தடை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதானை பொலிஸ் பிரிவில்  முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு பேரணிக்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம் என தெரிவித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, டீன்ஸ் வீதி, குலரத்ன மாவத்தை, டி.பி.ஜயா மாவத்தை, ஒராபிபாஷா மாவத்தையிலிருந்து டெக்னிக்கல் சந்தியின் ஒல்கோட் மாவத்தை வரையான பகுதிகளில் எதிர்ப்பு பேரணிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் இந்திரஜித், அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணிக்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றமும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிணங்க, ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு, ஜனாதிபதி மாளிகை, காலி முகத்திடல் வளாகம், காலி முகத்திடல் சுற்று வட்டம் முதல் N.S.K. சுற்றுவட்டம் வரையான பகுதிகள் மற்றும் செரமிக் சந்தி ஆகிய பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

-nf