அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள்

பலர் அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள் ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா 2023 கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பலர் அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள் ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பரிணாமங்களுடன் விஸ்தரித்து பல இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளை வழங்கி நாட்டின் கொள்கை தீர்மானத்தில் சந்தர்ப்பத்தையும் வழங்கி வருகிறோம்.

ஜனாதிபதி அவர்களுடன் மலையக மக்களின் அபிவிருத்திக்கான சந்திப்பு இடம்பெற்றது. ஆனால் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரதிநிதிகள் இதனில் பங்கு கொள்ளாது தவிர்த்தனர்.

எமது மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றினையாது தமது அரசியல் நோக்கத்திற்காக எமது மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள் மட்டுமல்லாது எமது மக்களின் அபிலாசைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள்.

கண்டி புனித சில்வர்ஸ்டர் கல்லூரி இலங்கைக்கு இளம் தலைவர்களை உருவாக்குகின்றனர் இம்மகத்தான செயலில் நானும் இணைந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியாகும். இக்கல்லூரி கட்டிட வசதிகளையும் நவீன கற்றல் வசதிகளையும் எதிர்பார்த்து இருப்பதை நான் அறிந்தேன்.

அந்த வகையில் எனது அமைச்சின் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஊடாக இக்கல்லூரிக்கு நவீன திறன் வகுப்பறை ஒன்றிணையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டிடத்தையும் வழங்க நான் தீர்மானித்துள்ளேன்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள இப் பாடசாலை வளர்ச்சியில் நாம் என்றும் முன் நின்று செயல்படுவோம். இன அடையாளம் எமது உரிமை சிலர் இதனை இனவாதமாக மாற்றுவதாலயே எமது நாடு இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. இளம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் இதனை மாற்றி அமைப்போம். என்றும் நாங்கள் உங்களுடன் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

-ad