ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தக்க ஆதாரங்கள் இல்லை

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதும் எம்மிடம் இல்லையென சனல் 4 ஆவணப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் தெரிவித்துள்ளனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

பேஸ்மென்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பெண் டி பியர் மற்றும் இயக்குனர் தொம் வோக்கர் ஆகியோர், ஏப்ரல் 21 தாக்குதல் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்சவை அதிபராக்குவதற்காக புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கும் இடையே தாம் சந்திப்பை ஏற்பாடு செய்ததாக குறித்த ஆவணப்படத்தின் அசாத் மௌலானா என்ற தகவலாளர் தெரிவித்திருந்தார்.

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றி, தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளவரென கூறப்படும் அசாத் மௌலானா இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் தொம் வோக்கர், சஹ்ரான் ஹாஷிமுடன் தகவலாளரான அசாத் மௌலானாக்கு நேரடித் தொடர்பு இருந்ததா? என்பது தமக்கு தெரியாது எனவும் சந்திப்பை ஒருங்கிணைப்பதில் அவர் எதற்காக இணைந்தார் என்பதற்கு தம்மால் தெளிவான பதிலை அளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாகச் சொல்வதானால், சஹ்ரானுக்கும் சுரேஸ் சாலேவுக்கும் இடையில் இதுபோன்ற முன் சந்திப்பு நடந்ததற்கான எந்த ஆதாரமும் தம்மிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

-ib