புலனாய்வுப் பிரிவின் தொடர் விசாரணை: தமிழ் சமூக ஆர்வலருக்கு அழைப்பாணை

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பை மீளக் கட்டியெழுப்பும் முயற்சி தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் சமூக ஆர்வலர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் விசாரணைக்காக கடந்த 21 ஆம் திகதி காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர், பால்ராஜ் ராஜ்குமாருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

முகப்புத்தக பதிவு

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (CTID) வாக்குமூலம் அளித்ததன் பின்னர், பால்ராஜ் ராஜ்குமார் தனது முகப்புத்தகத்தில் கருத்து தெரிவிக்கையில்,

“நீண்ட நேரம் விசாரணை நடை பெற்றது. நான் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை தொடர்ந்து ஆதரித்து பேசுவதாகவும், அதை மீள் உருவாக்கம் செய்ய முனைவதாகவுமே பிரதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.

அத்துடன் தொடர்ந்து அரசிற்கு எதிராக கருத்து தெரிவிப்பதுடன் மக்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்ய தூண்டுவதாகவும் இன்னும் பல குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தினார்கள். அதை அரசின் முக்கிய பாதுகாப்பு பிரிவே முன் வைத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ராஜ்குமார், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றையாவது நிரூபிக்க முடியுமா என அவர்களிடம் கேள்வி எழுப்பியதாக முகப்புத்தகத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக பால்ராஜ் ராஜ்குமார் குரல் எழுப்பி வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

-tw