இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று சோதனை முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த நான்காம் திகதி கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணமான கப்பல் நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்து அங்கிருந்து இன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிய பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையினை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அனைத்து நிர்மாணப்பணிகளையும் நிறைவு செய்ததன் பின்னர் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிரவும் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

-ib