சட்டவிரோதமாக 61 இலங்கையர்களை கனடா கூட்டிச்சென்றவர் கைது

61 இலங்கை பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது.

தமிழகத்தின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மொஹமட் இம்ரான் கான் என்ற 39 வயதுடைய நபரின் நடமாட்டத்தை சில மாதங்களாக கண்காணித்து வந்த இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம், தேனி மாவட்டத்தில் கைது செய்துள்ளது.

தவறான வாக்குறுதி

சந்தேகநபர் கடந்த 2021 ஆம் ஆண்டு கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தவறான வாக்குறுதிகளை வழங்கி சட்டவிரோதமாக கொண்டு செல்ல ஒரு திட்டத்தை வகுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு 23 இலங்கை பிரஜைகள் மற்றும் நான்கு முகவர்களையும் மங்களூருவில் மேலும் 38 இலங்கை பிரஜைகளையும் கைது செய்து வழக்கு தாக்கல் செய்தது.

வழக்கில் இதுவரை 13 சந்தேக நபர்களை கைது செய்த இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் தினகரன், காசி விஸ்வநாதன், ரசூல், உஷேன், அப்துல் முஹீது ஆகிய 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த சதித்திட்டத்தில் இம்ரான் கான் முக்கிய பங்கு வகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கைப் பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கும், பின்னர் மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு முக்கியப் பொறுப்பாக இம்ரான் கான் செயல்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

-jv