விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேட நடவடிக்கை

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கடந்த 19 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி வழக்கு தொடரப்பட்டு நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்று (23) காலை 9 மணிக்கு குறித்த அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றது.

கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது நிலத்திலிருந்து நீர் வருவதை அவதானிக்க முடிந்துள்ளது இருந்தும் தொடர்ச்சியாக குறித்த இடத்தினை அகழ்வு பணி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மேலும் மற்றுமொரு கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

குறித்த பகுதிக்கு அண்மையில் கடந்த பங்குனி மாதமளவில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதுவும் மீட்கப்படாத நிலையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ad