CIJ : LGBTQ+ நிகழ்வு தொடர்பாக PSM உறுப்பினர்கள்மீது நியாயமான விசாரணை நடத்த அழைப்பு விடுக்கிறது

சுதந்திர பத்திரிகை மையம் (The Centre for Independent Journalism) இன்று கட்சியின் இளைஞர் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட LGBTQ+ பட்டறை தொடர்பாகக் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட இரண்டு PSM உறுப்பினர்கள்மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று ஒரு அறிக்கையில், CIJ நிர்வாக இயக்குனர் வத்ஷ்லா நாயுடு, LGBTQ+ சமூக உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பான இடத்தை உருவாக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக “அவசியமற்ற விசாரணையை” எதிர்கொள்ளும் PSM உடன் குழு ஒற்றுமையாக நிற்கிறது என்று கூறினார்.

“காவல்துறை புகார்கள் பதிவு செய்யப்படும்போது விசாரணை செய்வது காவல்துறையின் கடமை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆயினும்கூட, கூட்டாட்சி அரசியலமைப்பின் 10 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான மையக் கோட்பாட்டின்படி அதிகாரிகள் நிற்க வேண்டும் என்பதை நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம்.”

“மலேசியாவின் தார்மீக மற்றும் மத விழுமியங்களின் அடிப்படையில் இந்த நிகழ்வைப் பல தரப்பினர் எதிர்த்தபோதிலும், அடையாள வெளிப்பாட்டை உள்ளடக்கிய கருத்துச் சுதந்திரம், நமது நாட்டின் மிக உயர்ந்த சட்ட கட்டமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, இது மலேசியாவின் மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது,” என்று வத்ஷ்லா (மேலே) கூறினார்.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவுகள் 5 மற்றும் 8(2) முறையே தனிநபர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கின்றன மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடு காட்டாதது உட்பட சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்கின்றன என்பதை அவர் அதிகாரிகளுக்கு நினைவூட்டினார்.

“எனவே, இந்த விசாரணை நியாயமாகவும் சார்புகள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், சர்வதேச மூன்று பகுதி தேவை, விகிதாசாரம் மற்றும் சட்டபூர்வமான சோதனையைத் தொடர்ந்து”.

“இந்த வழக்கு பரந்த மற்றும் தெளிவற்ற சட்டங்களான தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298A இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதால், இந்தத் தரநிலைகள் குறிப்பாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் – ஏனெனில் இந்தச் சட்டங்கள் பழமையான மதிப்புகளுக்கும் அரசியல் நோக்கங்களுக்கும் உகந்த வகையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

‘பொதுமக்களின் உணர்வுகளுக்கு எதிராக’

முன்னதாக, இருவரும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் புக்கிட் அமானில் உள்ள கூட்டாட்சி காவல் தலைமையகத்தில் தங்கள் வாக்குமூலங்களை வழங்குவார்கள் என்று வழக்கறிஞர் ராஜ்சூரியன் பிள்ளை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கை விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் முன்னதாக இந்த நிகழ்வுகுறித்த விசாரணையை உறுதிப்படுத்தினார், ஆனால் பழமைவாத குழுக்களின் கடுமையான எதிர்வினையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இது ஒத்திவைக்கப்பட்டது.

அந்த நேரத்தில், எந்தவொரு மதத்தையும் அவமதிப்பதன் மூலமோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலமோ பொது அமைதியைக் குலைப்பதை குற்றமாகக் கருதும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298A மற்றும் CMA 1998 இன் பிரிவு 233 இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக ஹுசைன் கூறினார்.

இந்தத் திட்டம் பொதுமக்களின் உணர்வுகளை மீறுவதாகவும், தேசிய சட்டங்களை மீறுவதாகவும் பார்க்கப்படுவதாகவும், இது நாட்டில் எந்த வகையான LGBTQ+ நடைமுறைகளையும் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வுக்கு எதிராக 21 புகார்கள் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெறுப்பு கருத்துகள்

பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் நயிம் மொக்தார் திட்டமிட்ட நிகழ்வுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை, PSM இன் சமூக ஊடகங்களில் வெறுக்கத் தக்க கருத்துகள் மற்றும் கொலை மிரட்டல்களை அதிகரித்துள்ளதாக PSM இளைஞர் தலைவர் அமண்டா ஷ்வீதா லூயிஸ் முன்பு கூறியிருந்தார்.

புதன்கிழமை (மே 28), LGBTQ+ கலாச்சாரத்தை இயல்பாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் நிராகரிப்பதாக நயிம் கூறினார்.

அவர் “பிரைடு மாதத்தை” முன்னிட்டு PSM யூத் நடத்திய “Pride Care: Queer Stories and Sexual Health Awareness” (பிரைடு கேர்: குவியர் கதைகளும் பாலியல் ஆரோக்கிய விழிப்புணர்வும்) நிகழ்ச்சியைப் பற்றிக் கருத்து தெரிவித்தார்.

நயீம் கூறியதாவது, “இத்தகைய நிகழ்ச்சிகள் மூடிய கதவுகளுக்குள் நடத்தப்பட்டாலும், அவை மலேசியர்களின் ஒழுக்கமும் மத மதிப்புகளும் மீதான சவாலாக இருக்கின்றன.”