தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிகக் கனிவுடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் அமைதி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த நாடு அமைதியாக இருக்க வேண்டும், தொடர்ந்து வளர்ச்சியும் முன்னேற்றமும் காண வேண்டும்; ஆனால் அதே நேரத்தில், தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதுவே முன்னுரிமையாகும்,” என்று இன்று கோலாலம்பூர், புக்கிட் ஜலீலில் நடைபெற்ற 2026 தேசிய அளவிலான தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் செயல்பாடு பாராட்டுக்குரியதாக உள்ளது என்றும், இதில் வலுவான வளர்ச்சி, சாதனை அளவிலான முதலீடுகள், குறைந்த வேலையின்மை விகிதம் மற்றும் ஆசியாவிலேயே ரிங்கிட்டின் அபரிமிதமான செயல்பாடு ஆகியவை அடங்கும் என்று அன்வார் கூறினார்.
இருப்பினும், இந்த முன்னேற்றங்களால் தொழிலாளர்கள், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினர், நியாயமான பலன்களைப் பெறுகிறார்களா என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
நமது நாட்டில் 1 பில்லியன் அல்லது 2 பில்லியன் ரிங்கிட் லாபம் ஈட்டும் பெரிய நிறுவனங்களை நம்மால் பட்டியலிட முடியும், ஆனால் அவர்களால் தொழிலாளர்களுக்கு 40 ரிங்கிட் சம்பள உயர்வை அனுமதிப்பது கூட கடினமாக உள்ளது.
தொழிலாளர்கள் ஒழுக்கமாகவும் அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அது அனைத்து மட்டங்களிலும் உள்ள தொழிலாளர்களின் பொறுப்பாகும்.
இந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், அதற்காக குப்பை சேகரிப்பவர்களும் தூய்மைப் பணியாளர்களும் தியாகங்களைச் செய்கிறார்கள். ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள், உங்கள் மனசாட்சியைத் தொட்டுத் தேடுங்கள்; இவர்களுக்கு உரிய கவனமும் நீதியும் கிடைக்கிறதா என்று கேளுங்கள்,” என்று அவர் கூறினார்.
அனைத்து கார்ப்பரேட் தலைவர்களும் தங்கள் ஊழியர்களை நடத்தும் விதம் குறித்து சிந்தித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும் அளவிற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. அதை நான் ஒருபோதும் முன்மொழியவில்லை; அதேபோல் நமது போட்டித்திறனை (competitiveness) நாம் இழக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை, என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய மற்றும் கார்ப்பரேட் தலைவர்கள் கூடுதல் கவனத்துடனும், அதிகக் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்றுதான் நான் பரிந்துரைக்கிறேன், என்று அவர் கூறினார்.
தொழிலாளர் தினம் என்பது மக்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லையென்றால் அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை அனைவருக்கும் நினைவூட்ட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
கீழ்மட்டத் தொழிலாளர்கள் இல்லையென்றால், வெற்றிகளைக் கொண்டாட எந்த நிறுவனங்களும் இருக்காது, என்று அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினையை ஒரு முக்கியக் கொள்கை முன்னுரிமையாகக் கருதி அரசாங்கம் அதற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், அரசாங்கம் முன்னதாகக் குறைந்தபட்ச ஊதியத்தை 1,200 ரிங்கிட்டிலிருந்து 1,500 ரிங்கிட்டாக உயர்த்தியதையும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கான (GLCs) குறைந்தபட்ச ஊதியத்தை 3,000 ரிங்கிட்டாக உயர்த்தியதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
-fmt
























