நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை ‘யாயாசான் சரவாக்’ (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக ஏற்கும் என்று சரவாக் பிரீமியர் அபாங் ஜோஹாரி ஓபெங் தெரிவித்துள்ளார். சரவாக்கின் உள்நாட்டு மக்களுக்குச் சேவை செய்யும் போது தங்களின் உயிரைத் தியாகம் செய்த ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் இந்த உதவி வழங்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்குப் பின் அமைச்சரவைக் கூட்டத்தில் படில்லா பங்கேற்பு
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை (Heart bypass) செய்து கொண்ட துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப், அதற்குப் பிறகு முதன்முறையாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இருப்பினும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வரும் செப்டம்பர் 27 வரை தாம் மருத்துவ விடுப்பில் இருக்கப்போவதாகவும், விடுப்பு காலத்தில் அமைச்சரவைக் கூட்டங்களில் மட்டும் நேரடியாகப் பங்கேற்பேன் என்றும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் சீர்திருத்த அமைச்சருமான படில்லா தெரிவித்துள்ளார்.
























