தீர்மானத்தை ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; அதிர்ச்சியில் இலங்கை!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 19-வது மாநாட்டில், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நேற்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது. அத்துடன் அந்த தீர்மானம் குறித்து துணை மாநாடொன்றினையும் இன்று வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது.

நேற்று அமெரிக்காவினால், மனித உரிமை மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், மன்றத்தினால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன் இந்த தீர்மானம் மன்றத்தின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானம், இலங்கை அரசாங்கத்துக்கு அனைத்துலக அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

[அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் தமிழ் ஆக்கம்]

தீர்மான வரைபு: இலங்கையில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)

ஐக்கிய நாடுகள் சாசனம், அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக…

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் அனைத்துலக விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான அனைத்துலக மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்…

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்னைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று…

அனைத்துலக சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், அனைத்து இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் இலங்கை அரசைக் கோருதல்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், அனைத்துலக சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கோருதல்.

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22-வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

TAGS: