ஒரிசாவில் இத்தாலி சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டனர்

இந்தியாவின் கிழக்கே, ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இத்தாலி நாட்டவர்கள் இருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கந்தாமால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்கள் இருவரே கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களில் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக அயல்பிரதேசமொன்றில் சுற்றுலாப் பயணிகளுக்கான முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை இந்தக் கடத்தலைக் கண்டித்துள்ள ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், சுற்றுலாப் பயணிகளை மனிதநேய அடிப்படையில் விடுவிக்குமாறு மாவோயிஸ்ட்டுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, இத்தாலியர்களுடன் இந்தியர்கள் இருவரும் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் இத்தாலி மற்றும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் பேச்சுநடத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவில் தேசிய மற்றும் மாநில அரச நிர்வாகங்களை எதிர்த்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பல தசாப்தங்களாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பல மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: