தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதாக உறுதியளிக்கவில்லை: இலங்கை அரசு

தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பது குறித்து, இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பிறகு, குடிபெயர்ந்த தமிழர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு திட்டங்களை பார்வையிட, பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 12 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழு கடந்த வாரம் இலங்கை பயணம் மேற்கொண்டது.

ஆறு நாள் பயணம் மேற்கொண்ட இந்த குழுவினர் கடந்த, 21-ம்தேதி இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சேவை சந்தித்து பேசினர். தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்க வழி செய்யும், 13-வது சாசன ஒப்பந்தம், கடந்த, 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜிவ் – ஜெயவர்த்தனே முன்னிலையில் கையெழுத்தானது. இந்த, 13-வது சாசனம் குறித்து, ராஜபக்சேவிடம் பேசியதாகவும், இதை நிறைவேற்ற முயற்சிப்பதாக ராஜபக்சே தெரிவித்ததாகவும் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.

இதற்கிடையே, இலங்கை அரசின் ஆதரவு பத்திரிகையான ‘தி ஐலண்ட்’ இந்த கருத்தை மறுத்துள்ளது. “ராஜபக்சேவை சந்தித்த இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம், தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும், 13-வது சாசனம் குறித்த எந்த உறுதி மொழியும் அளிக்கவில்லை” என, இலங்கை அரசு மறுத்துள்ளதாக இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

TAGS: