இலங்கையின் வடபகுதியில் கொத்தணிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது

இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐநாவின் நிபுணர் ஒருவர் வெடிக்காத கொத்தணிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் ஒரு குழந்தை வெடிபொருள் வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகில் இந்த அபாயகரமான ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

2009-இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை இது காண்பிக்கிறது. ஆனால், அனைத்துலக  உடன்படிக்கைகளின்படி தடை செய்யப்பட்ட இப்படியான ஆயுதத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை தான் முன்னர் மறுத்தது போலவே இப்போதும் இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக வெடிக்காத கொத்தணிக்குண்டுகளை தாம் பார்த்ததாக உறுதி செய்யும் ஐநாவின் மின்னஞ்சல் ஒன்றை தாம் பார்த்ததாக அமெரிக்காவின் ‘அசோஸியேட்டட் பிரஸ்’ செய்தி சேவை கூறியுள்ளது.

இறுதிக்கட்டப் போர் நடந்த கிளிநொச்சிக்கு அருகே உடைந்த இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் வெடிபொருள் ஒன்று வெடித்து கொல்லப்பட்டு, அவனது சகோதரி படுகாயமடைந்த இடத்துக்கு அருகே இந்த கொத்தணிக்குண்டின் துணை வெடிபொருள் காணப்பட்டதாக யூ.என்.டி.பியின் நிலக்கண்ணி நிபுணரான அலன் பொஸ்டன் கூறியதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.

கொத்தணிக் குண்டுகள் என்ற வகைக்குள் வரும் எந்தவொரு ஆயுதங்களையும் இலங்கை அரசாங்க ஆயுதப்படைகள் பயன்படுத்தவில்லை என்று இராணுவப் பேச்சாளரான ருவான் வணிகசூரிய திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரசாங்க படைகள் வீசிய சில குண்டுகளில் இருந்த சிறிய கொத்துக்கொத்தான குண்டுகள், பல இடங்களில் சிதறிவிழுந்து வெடித்ததாகவும், அல்லது சில ஆண்டுகள் தாழ்த்தி அவை வெடித்ததாகவும், பொதுமக்கள், போர் விசாரணையின் போதும் வேறு பல சந்தர்ப்பங்களிலும் கூறியிருக்கிறார்கள்.

TAGS: