இந்து கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த சிங்கள அமைச்சரின் ஆர்பாட்டத்திற்கு தடை

இலங்கை அரசாங்க அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சிலாபம் முன்னீஸ்வரம் காளி கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த போராட்டத்துக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது.

அந்தக் கோயிலில் நடக்கவிருந்த மிருக பலி பூசையை தடைசெய்ய வேண்டும் என்று கோரியே அமைச்சரும், வேறு சில அமைப்புக்களும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மிரட்டியிருந்தனர்.

எனினும், இது தொடர்பாக காவல்துறையினரால் சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அந்த கோயிலில் நூற்றுக்கணக்கான ஆடுகளும், கோழிகளும் பலியிடப்படுவதாகக் கூறி அங்கு சென்று அத்தகைய பலியிடும் பூசையை கடந்த ஆண்டு அமைச்சர் மேர்வின் சில்வா குண்டர் கும்பல் போன்று அடாவடித்தனம் செய்து தடுத்திருந்தார்.

இந்துக்கள் சிலர் இந்த பலியிடும் பூசையை வரவேற்கின்ற போதிலும், அப்பகுதியை சேர்ந்த பெரும்பான்மையினரான பௌத்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அமைச்சர் நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அரசாங்க ஆதரவு பிக்குவான ஓமல்பே சோபித தேரரும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

எப்படியிருந்த போதிலும், தற்போது அந்த பலியிடும் பூசை நடைபெறும் தினம் வரை அந்த கோயிலில் எந்தவிதமான ஆர்பார்ட்டங்களையும் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமது பலிப்பூசையை தடுத்துநிறுத்த அமைச்சருக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்று கூறியுள்ள அந்த கோயில் அர்ச்சகர், ஜனாதிபதியிடம் மேலதிக பாதுகாப்பு கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

TAGS: