சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் வீடுகள் மீது தாக்குதல்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவரது வீடுகளின் மீது புதன் கிழமை அதிகாலை அடையாளந் தெரியாதவர்களினால் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

அக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.எல்.மஜீத் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோரது வீடுகள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் தமது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே தொடர்பு பட்டிருப்பதாக ஏ.எல்.மஜீத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல்க்ளை அடுத்து , அமைச்சரவைப் பதவி விஷயத்தில் , அமைச்சுப் பதவி பெறாத ஒரு உறுப்பினருடன் தொடர்புடைய சிலரால் தனக்கு அச்சுறுத்தல் வந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்த சம்பவத்துடன் தன்னை தொடர்பு படுத்துவதை முற்றாக நிராகரித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.ஜமீல். தன்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு குறித்து தான் கவலைப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த குண்டு தாக்குதல் சம்பவங்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே இடம் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகன தெரிவித்தார்.

காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்கள் எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை.

TAGS: