ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கையின் நட்பு நாடுகள் நீக்கம்

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சுழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ஜேர்மனி, அயர்லாந்து, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ் தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசாகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகள் அடுத்தாண்டில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்க மாட்டாது. ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் நட்பு நாடுகளின் ஆதரவு இல்லாத இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என அவ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இம்முறை பாகிஸ்தான் தெரிவாகியிருப்பது மட்டுமே, இலங்கைக்கு ஆறுதலளிக்கக் கூடிய ஒரே விடயம் என மேலும் குறிப்பிட்டுள்ளது.

TAGS: