சிலாங்கூர் தோட்ட மாணவர் தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழா

asramaமலேசிய திருநாட்டின்  மேம்பாட்டுக்கு  உழைத்து  உருக்குலைந்தது இந்திய இனம் என்றால் அது மிகையாகாது.

ஆனால், அப்பெருமைக்குரிய இனம் இன்று பற்பல வகைகளில்  சிறுமைப் படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். வீண் வாய்வீச்சுக்கு நமக்கு நேரமில்லை, பிற்போக்கு வாதங்களிலேயே 56 வருடங்களை நாம் தொலைத்து விட்டோம். இனி வரும் காலத்தையாவது எதிர்காலச் சந்ததியினர்  சாதிக்க நாம் வழி அமைத்துத் தர வேண்டும். அதனைச் சாதிக்க இந்நாட்டு மக்கள், சிலாங்கூர் மாநிலப் பக்காத்தான்  அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு கேட்டுக்கொண்டார்.

இளைஞர்களைப் பயனுள்ளவர்களாக்குவது அரசின் பொறுப்பு

இன்று குற்றச்செயலில் ஈடுபடும் நம் இளைஞர்களின்  எண்ணிக்கையும், குற்றச் செயல்களால் பாதிக்கப்படும்  இந்திய குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை இந்நாட்டு அரசாங்கம் கருத்தில்  கொள்ள வேண்டும். இந்திய சமுதாயத்தில் பெரிய எண்ணிக்கையிலான  இளைஞர்கள் குற்றச் செயல் மற்றும் சமூகச் சீர்கேடுகளில் சிக்கி அல்லல் படும் அவல நிலையைப் போக்க வேண்டும்.  அதற்குச் சிறைச்சாலையும், தண்டனையும் மட்டும் தீர்வாகாது.

xavier3அவர்களைச் சீர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கும் அதே வேளையில், இனி வரும் இளைஞர்களைச்  சமுதாயத்திற்குப் பயனானவர்களாக ஆக்கும் பொறுப்பு அரசுடையது என்பதனை அனைவரும்  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

நமது இளைஞர்களின் சீர்கேட்டுக்குச் சுற்றுச்சூழல் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இந்த மாணவர் தங்கும் விடுதி திட்டத்தின் வழி நம் இளைஞர்களுக்கு மாறுபட்டச் சுற்றுச்சூழலை உருவாக்க முனைந்துள்ளது சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசு. ஆக, நம் இளைஞர்களின் அறிவு ஆற்றலை அவர்களின் குடும்ப மேம்பாட்டுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும்  பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

ஐம்பது இலட்சத்தை ஒதுக்கலாமே!

“ஆனால், இந்தச் சுந்தர நாட்டில் கடந்த 56 வருடங்களாக  மேற்கொள்ளப்பட்டு வரும் 10 மலேசிய திட்டங்களில் ஒரு திட்டத்தில்கூட அதற்கான ஒதுக்கீடோ அறிவிப்போ இல்லையே என்பதே எங்கள் ஆதங்கம்.  இந்திய இளைஞர்களின்  ஆற்றலை மேம்படுத்தவும், பயன்படுத்தவும்  திட்டமிட வேண்டியவர்கள் அவர்களைத் தவறான வழியில் இட்டுச் சென்று விட்டனர்.

“ஆக, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த மாணவர் தங்கும் விடுதி திட்டத்தில் முதல் கட்டமாக  500 மாணவர்கள் தங்கிப் படிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. அது முழுக்க ஏழைக் குடும்ப மாணவர்களுக்குப் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டில்  உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தை வெற்றி பெற வைப்பது இச்சமுதாயத்தின் மீது பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரின் கடமையுமாகும்”, என்று சேவியர் இத்திட்டத்தின் நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் விளக்கினார்.

சிலாங்கூர், ஈஜோக்கில் அமையவிருக்கும் இத்தங்கும் விடுதி ஒரு முன்னோடி திட்டமானாலும், இது போன்ற திட்டங்களை நாடு முழுவதிலும் குறிப்பாக எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்த வேண்டும். அனைத்து உரிமைகளும் கொண்ட குடிமக்களாக இந்நாட்டு இந்தியர்களை பாரிசான் அரசு அங்கீகரிப்பது உண்மையானால், பொங்கல் வைக்க 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதைவிட இந்திய மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி அமைக்க  ரிம50 இலட்சங்களையாவது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

“ஏற்கனவே, சிலாங்கூர் மாநில சமுதாயத் திட்டங்கள் பலவற்றை மத்திய அரசு பின்பற்றுவதைப் போன்று இத்திட்டத்தையும் தேசிய அளவில் செயல்படுத்த பாரிசான் மத்திய அரசுக்கு மக்கள் நெருக்குதல் அளிக்க வேண்டும்.

“இந்தத் திட்டம் தோட்டப்புற ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் ஊக்குவிப்பு அளிக்கவும், வாழ்வில்  வழிகாட்டவும் பெரும் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறிய சேவியர்,  “நம் சமுதாயத்தின்  அவலநிலையைக் கண்டு இது போன்ற நமது திட்டங்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு நாம் ஆதரவாக இருப்போம்”, என்று உறுதியளித்தார்.

மக்களுக்காக உழைத்தவர்களுக்கு கௌரவிப்பு 

bdul-Khalid-Ibrahimஇது ஒரு வரலாற்று பூர்வமான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் முற்றிலும் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தோட்ட மாளிகையில் தோட்டப்புற  மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சிலாங்கூர் மாநில அரசு அமைக்கவிருக்கும் தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழா நடத்தப்படுகிறது.

மேலும், மக்களுக்காக உழைத்து ஓய்ந்தவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியையும் 2-2-2013 இல் காலை மணி 10.00 க்கு ஒருசேர நடத்துகிறது சிலாங்கூர் மாநில அரசு.

இந்நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராஹிம்  அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார். மக்கள் நலன் போற்றும் பக்காத்தான்  அரசின் மற்றுமொரு சமுதாயத் திட்டமான இதன் அறிமுக விழாவில் தவறாது கலந்துகொள்ளுமாறு அனைவரையும்  அழைக்கிறோம் என்றார்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும்  ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

TAGS: