சிறுபான்மை மக்களின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளது: நவனீதம்பிள்ளை

navaneethmpilaiஇலங்கையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான கேள்வி எழுந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி நவனீதம்பிள்ளையின் பிரதிநிதியான, பதில் ஆணையாளர் குயாங் வாங் காங் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அவ்வறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தெரிவு செய்யப்பட்ட சில விடயங்களை மட்டுமே இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்தும் விடயங்களில் இன்னமும் பல்வேறு கட்டங்கள் தாண்ட வேண்டிய நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதன் மூலம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சாட்சிகள் மற்றும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதற்கு சரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் சர்வதேச சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை சுயாதீன ஆணைக்குழுவொன்று கண்காணிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, குயாங் வாங் காங் தெரிவித்துள்ளார்.

TAGS: